Saturday, January 7, 2023

விதை - கவிதை - கதை ( பகுதி - 3)

சேலம்...

பதினைந்து ஆண்டுகள் பழகிய கிராமத்து வாசம் தாண்டி, சற்றே வேறுபட்டதாய் இருந்தது.

பதினொன்றாவது வகுப்பு. புதுப்புது நண்பர்கள்.  கண்டனூரில் ஓட்ட முடியாத மிதிவண்டியை தொடர்ந்து ஓட்டி உயரமாகி இருந்தேன். பள்ளி முடிந்ததும் டியூஷன் நண்பர் குழுவுடன் செல்வது வழக்கமாயிருந்தது. அவ்வப்போது அப்பா, அம்மா ஊருக்கு செல்லும் போது உணவுக்காக கொடுத்த காசு  செலவழிக்காமல் புதிதாய் அறிமுகமான ரோஜா மியூசிக்கல்ஸ் நண்பர் கடையில் கேசட்டுகளாய் சேர்ந்தது.  பெரும்பாலும் பட்டினி... இளையராஜா முகம் கொண்ட எக்கோ மற்றும் ராஜா ஒலிநாடாக்களை பாடல்கள் கேட்காமலே கண்ணை மூடிக்கொண்டு வாங்குவது வழக்கம்.  தொடர்ந்து அதை வாங்கி, இணைந்து பாடிப் பாடி பாட்டு வளர்ந்தது. அந்த வகையில் என் பாட்டு வாத்தியார் இளையராஜாவும் அவரது பாடல்களுமே. மேலும் நான்காவது வகுப்பில் இருந்து ஆண்டின் இறுதி நாளில் ஆசிரியைகள் என்னை பாடச்சொல்வார்கள். அப்படி நான்காம் வகுப்பு இறுதி நாளில் பாடியது... "ராக தீபம் ஏற்றும் நேரம் புயல் மழையோ" என்ற பயணங்கள் முடிவதில்லை படப்பாடல். நன்றாகப் பாடினேன் என்று ஆசிரியை தான் சென்ற அடுத்த வகுப்புக்கும் அழைத்து சென்று பாடச் சொன்னார்கள். எட்டாவது வகுப்பு இறுதி நாளில் "ஓ... நெஞ்சே நீதான் பாடும் ராகங்கள் ".  மேலும் நான்காவது முதல் எட்டாவது வகுப்பு வரை தமிழில் முதல் மதிப்பெண் பெறுவதற்காய், பெற்றதற்காய் என் தமிழ் ஆசிரியை கலைச்செல்வி மற்றும் ஆசிரியர் ஜானகி ராமன் பரிசுகள் தருவதுண்டு. அப்படி பரிசுகளும் வந்தது, தமிழ் ஆர்வமும் அதிகரித்தது.

பதினொன்றாவது  வகுப்பில் 24 பெண்கள், 15 ஆண்கள். அளவில்லா அரட்டைகள், நல்ல மதிப்பெண்கள் என்று இருந்ததால் அனைவருக்கும் நான் நல்ல பரிச்சயம்.மதிய உணவு இடைவேளைகளில் மேல் மாடியின் படிகளில் அமர்ந்து நண்பர்கள் அரட்டை அடிப்பதுண்டு. அப்போது நிகழ்ந்தது அந்த வேதியல் மாற்றம். மாடியின் மேலிருந்து பார்க்கும் பொழுது ஒரு தேவதை தன் வகுப்புத் தோழிகளோடு வந்து கொண்டிருந்தாள். அனைவரும் பார்த்து கொண்டிருந்த போது,  அந்த ஒரு தேவதையின் தோற்றம், அவளின் ஒற்றைகல்  மூக்குத்தி வெயில் பட்டு ஒளிர்ந்திழுக்க, அவள் தோழிகளோடு புன்னகைத்து பேசி வரும் அழகில் மனம் லயித்தது, இனம் புரியா உணர்வுகளில் திளைத்தது...
தினமும் உணவு இடைவேளைகளில் கூடினோம்.

காட்சிகள் தொடர, கவனங்கள் படர... ஏராளம் கேள்விகள் எழுந்தது என்னுள்.

யாரவள்?  எந்த வகுப்பு?  அவள் பெயர் என்ன? 

No comments:

Post a Comment